Tuesday 9 June 2015

தென்னை மரங்களில் சாம்பல், பேரான் சத்துப் பற்றாக்குறைபோக்கும் முறை குறித்து வழிகாட்டல்

சேதுபாவாசத்திரம், : தென்னையில் காணப்படும் சாம்பல் சத்து மற்றும் போரான் சத்து பற்றாக்குறையை போக்கும் வழிமுறைகள் பற்றி சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தென்னைக்கு மற்ற சத்துக்களை விட சாம்பல் சத்துதான் மிக அதிகமாக தேவைப்படுகிறது. இந்த சத்து குறைந்தால் தேங்காய் அளவு சிறுத்து, எண்ணிக்கையும் குறைந்து விடும். மேல் இலைகள் பசுமையாக இருந்தாலும் அடி இலைகளில் வெளிர்பச்சை நிற புள்ளிகள் தோன்றி மஞ்சள் நிறமடைந்து பின்னர் பழுப்பு நிறமடையும் இலைகள் கீழ்நோக்கி தொங்க தொடங்கும். 

முதிர்ச்சி அடையும் முன்பே இலைகள் உதிர்ந்து விடும் இக்குறைபாட்டை போக்குவதற்கு 5 வருடங்களுக்கு மேல் வயதுடைய தென்னைமரத்திற்கு ஒரு வருடத்திற்கு 50 கிலோ நன்கு மக்கிய தொழுஉரத்துடன் யூரியா 1.300 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.500 கிலோ உரங்களை கலந்து மரத்தடியில் இருந்து 5 அடி தள்ளி வட்டமாக உரமிட்டு மண்வெட்டியால் உரத்தை மண்ணுடன் கலந்து பிறகு நீர்பாய்ச்ச வேண்டும். மேற்கண்ட உரத்தை இரண்டாக பிரித்து ஜூன் ,ஜூலை மாதத்திலும், டிசம்பர், ஜனவரி மாதத்திலும் இரண்டு முறையாக பிரித்து இட வேண்டும். 

பொட்டாஷ் உரம் 2 கிலோவிற்கு பதிலாக 3.500 கிலோ இடுவதினால் தென்னையை தாக்கும் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்படுத்தப்படுகிறது. போரான்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் இளம் கன்றுகளில் இலை பிரியாமல் இருக்கும். வளரும் குருத்து இலைகள் வளர்ச்சி குன்றி இலைகள் பிரியாமல் இருக்கும். பாலையில் இளம் பிஞ்சுகள் காய்ந்து கருப்பாக காணப்படும். குரும்பைகள்  அதிகமாக கீழே உதிரும். வெற்றுத் தேங்காய்கள் மற்றும் ஒல்லிக்காய்கள் தோன்றும். தேங்காய்களில் வெடிப்புகளும், நீளமான எடை குறைந்த தேங்காய்கள் தோன்றும்.

 இக்குறைகளை போக்கிட நன்கு வளர்ந்த தென்னைமரத்திற்கு ஆண்டுதோறும் ஒரு மரத்திற்கு ஒரு கிலோ வீதம் தென்னை நுண்ணூட்ட சத்து உரத்தினை இட வேண்டும் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தயாரிப்பான தென்னை ஊட்டச்சத்துகரைசல் (தென்னை டானிக்) மரம் ஒன்றுக்கு 200 மில்லி வீதம் 6 மாதத்திற்கு ஒரு முறை வேர்மூலம் செலுத்த வேண்டும். இந்த வழிமுறைகளை கடைப்பிடித்து தென்னையில் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.  இவ்வாறு அவர் அந்த செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Source : Dhinakaran

No comments:

Post a Comment