Tuesday 14 April 2015

சின்ன சின்ன செய்திகள்


பதிவு செய்த நாள்

15ஏப்
2015 
00:00

புதிய எண்ணெய்வித்து "சியா' மற்றும் சிறுதானியப்பயிர் "கினோவா' : மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் கீழ், கர்நாடக மாநிலம் மைசூருவில் மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. "சியா' என்ற எண்ணெய்வித்து பயிரையும் "கினோவா' என்ற சிறுதானியப் பயிரையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் இந்த தானியங்களுக்கான சந்தை வாய்ப்பு பெரியளவில் உருவாகியுள்ளது. "சியா' என்ற எண்ணெய்வித்து தானியத்தில் கொழுப்புச்சத்து குறைவு. சிறுதானிய ரகமான "கினோவா'வில் 14 சதம் புரதம் இருக்கிறது. இதை அதிக புரதச்சத்து உள்ள தானியம் என்று ஐநா சபை அங்கீகரித்து உள்ளது. இரண்டு ரகங்களும் சூப்பர் புட் என்று உலகளவில் பிரபலமாகி வருகின்றன. ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் கினோவாவை வறட்சியான நிலங்களில் விவசாயிகள் பயிர் செய்து விளைவித்துள்ளனர்.
சியா, கினோவா ஆகியவற்றை ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர் மாதம் என இரு பருவங்களில் பயிரிடலாம். மேலும் விபரங்களுக்கு தொடர்பு முகவரி : Head Information and Publicity CFTRI, Mysore570 020; Telephone: 0821 252 4534 / 251 5910. email : ttbd@cftri.res.in. Website: www.cftri.res.in.
திராட்சைக்கு உயிர் உரங்கள்: திராட்சை கொடி நடுமுன் செடி நடுவதற்காக தோண்டப்பட்ட குழியில் உள்ள மண், திராட்சை கொடி நன்றாக வளர்வதற்கு வேண்டிய இடுபொருட்களை கொண்டிருக்க வேண்டும். அதற்கு உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் சூடோமோனாஸ் போன்ற உயிர் உரங்களை இடுதல் அவசியம். அத்துடன் இவற்றை நன்கு மக்கிய தொழுஉரத்துடன் கலந்து இடுவது அவசியமாகும். குழியில் இடவேண்டிய அளவுகள் - அசோஸ்பைரில்லம் - 50 கிராம், பாஸ்போபேக்டீரியா 50 கிராம், சூடோமோனாஸ் 50 கிராம், டிரைபேமிக்ஸ் 100 கிராம், நன்கு மக்கிய தொழுஉரம் 20 கிலோ.
மிளகு நாற்றங்கால் : பயிர் பெருக்கத்திற்கான மிளகு தண்டுப் பதியன்களை முன்பே தயார் செய்யாத நிலையில் பயிர் பெருக்கத்திற்கான பணிகள் தொடரலாம். முன்னமே அடையாளமிட்டு சுருட்டி வைத்த ஓடு தண்டுகளை மரக்குச்சிகளிலிருந்து
பிரிக்க வேண்டும்.
அதிகமாக முதிர்ச்சியடைந்த மற்றும் முதிர்ச்சியடையாத கொடியின் பாகங்களை அகற்ற வேண்டும். பின்னர் ஓடு தண்டின் நடுப்பகுதியை 2-3 கணுக்களை உடைய துண்டுகளாக வெட்ட வேண்டும். மேல் மண், மணல் மற்றும் தொழுஉரம் ஆகியவற்றை 3:1:1 என்ற விகிதத்தில் கலந்து 6 அங்குலம் நீளம், 4 அங்குலம் அகலம் உடைய பாலிதீன் பைகளில் நிரப்பி அதில் தண்டுப் பதியன்களை நட வேண்டும். பாலிதீன் பையின் அடிப்பாகத்தில் போதுமான அளவில் துளைகள் இட வேண்டும். பந்தலில் பாலிதீன் பைகளை வரிசையாக அடுக்கி தண்ணீர் ஊற்ற வேண்டும்.
இஞ்சியின் பயன்கள் : சளியுடன் கூடிய இருமல் கட்டுப்பட - இஞ்சியை இடித்து சாறு எடுக்கவும். ஒரு தேக்கரண்டி அளவு சாறுடன் சிறிதளவு தேன் கலந்து தினமும் மூன்று வேளைகள் ஏழு நாட்களுக்குப் பருகவும்.
பசியின்மை மற்றும் வயிற்றுப் பொருமல் தீர - முற்றிலும் பசுமையான இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமான தேனில் இஞ்சித்துண்டுகள் மூழ்கி இருக்குமாறு ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பின்னர்தினமும் இரண்டு துண்டுகள் வீதம் உணவிற்கு முன்னர் மென்று தின்ன வேண்டும்.
வாந்தி கட்டுப்பட - இஞ்சிச்சாறும், வெங்காயச்சாறும் வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து கலந்து, சிறிதளவு தேன் சேர்த்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும்

Source: Dinamalar.

No comments:

Post a Comment