Wednesday 4 March 2015

சின்ன சின்ன செய்திகள்

பதிவு செய்த நாள்

04மார்
2015 
00:00
புதிய வெளியீடுகள் : த.வே.பல்கலைக்கழகம் சமீபத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கி வெளியிட்டுள்ள இரகங்கள் மற்றும் கருவிகள்.
எம்.டி.யு.1 ரக கொத்தவரை : வயது 90-100 நாட்கள் மகசூல் 300 - 350 கிராம் / செடி சிறப்பு இயல்புகள் ஒவ்வொரு காயும் 14 செ.மீ. நீளம் உடையது. ஒவ்வொரு செடியிலும் 150 முதல் 175 காய்கள் வரை காய்க்கும். பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவு. குறைவான பாசனத்திலும், மானாவாரியிலும் நல்ல மகசூல் தரவல்லது. மதுரை மாவட்ட விவசாயிகளின் காய்கறி மகசூலில், இந்த கொத்தவரை ரகம் சாதனை புரியும் என எதிர்பார்க்கலாம். எக்டருக்கு 16 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு எக்டருக்கு 7 கிலோ விதை தேவைப்படும்.
வி.பி.எம்.5 வீரிய ஒட்டு ரக தென்னை : ஆண்டுக்கு 161 காய்கள் மகசூலாகக் கொடுக்கிறது. நான்கு வருட முடிவில் பூக்கும் திறன் கொண்டது. ஒரு எக்டரில் சுமார் 28 ஆயிரத்து 175 காய்கள் 
மகசூலாக கிடைக்கும். கொப்பரை என்றால் 422 டன் அளவுக்கு கிடைக்கும். இளம் காய்கள் இளநீருக்கு உகந்தது. ஒரு காயிலிருந்து 285 மிலி இளநீர் கிடைக்கும். இளநீர் 4.8 பிரிக்ஸ் அளவுடன் அதிக இனிப்புச் சுவையுடன் இருக்கும். மானாவாரிக்கு ஏற்ற ரகம்.
கருவிகள் :
டிராக்டரால் இயங்கும் மஞ்சள் கரணை விதைக்கும் கருவி : இதனை 35 முதல் 45 HP திறன் கொண்ட டிராக்டர் மூலம் இயக்க முடியும். ஒரே நேரத்தில் மூன்று சால்களில் சீரான இடைவெளியில் மஞ்சள் கரணைகளை விதைக்க முடியும். சால்களுக்கு இடையேயான தூரத்தை தேவைக்கேற்றவாறு மாற்றியமைக்க முடியும். இக்கருவியைக் கொண்டு ஒரு நாளைக்கு ஒரு எக்டர் பரப்பில் விதைக்கலாம். இதன் விலை ரூ.50 ஆயிரம்.
டிராக்டரால் இழுக்கப்படும் இரு சக்கரப்பெட்டிக்கு திரவ ஆற்றலால் இயங்கும் தடுப்புக்கருவி : (Hydraulic brake for two wheel tractor trailer System) 4/2 நேரடி மின்னோட்டத் தடுப்பானால் இணைக்கப்பட்டுள்ள இந்தக் கருவி, டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருக்கும். தடுப்புக்கருவியின் மிதிக் கட்டையை அழுத்தும் போது, சக்கரத்தில் இணைக்கப்பட்ட உருளை வடிவ கருவியின் உதவியுடன் பெட்டி நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.41 ஆயிரம். தொடர்புக்கு : பயிர் இரகங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு ""இயக்குனர், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல்துறை, த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003. போன் : 0422 - 661 1318, 661 1215.
கருவிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு - முதல்வர், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422 - 661 1255, 661 1253.
மயில் இனப்பெருக்கம் மற்றும் பழக்க வழக்கங்கள் : மயில்கள் சிறு குழுக்களாக வாழும் இயல்புடையவை. ஒவ்வொரு குழுவிலும் 3 முதல் 5 பெண் மயில்களும் ஒரு ஆண் மயிலும் இருக்கும். இனப்பெருக்க காலத்தில் இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து காணப்படும். அதன் பின் பெண் மயில்கள் முட்டையிட ஆரம்பிக்கும். இவை ஓர் இனப்பெருக்க காலத்தில் 8 முட்டைகள் இடும். இம்முட்டைகள் கோழி முட்டைகளை விட பெரியதாக இருக்கும். முட்டையானது பெண் மயில்களாலேயே அடைகாக்கப்படுகிறது. அடைக்காலம் 28 நாட்கள். குஞ்சுகள் பொறித்த உடனேயே அவற்றின் தாயை பின் தொடர்கின்றன. மயில்கள் பெரும்பாலும் புதர்களிலேயே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். குஞ்சுகள் அனைத்தும் நேர்கோட்டில் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துச் செல்லும். பெரும்பாலும் மயில்களின் இனப்பெருக்கம் மழையினைச் சார்ந்தே உள்ளது. இந்தியாவில் ஏப்ரல் - மே மற்றும் அக்டோபர் - நவம்பர் ஆகிய மாதங்களில் நடைபெறுகிறது.
மயில்கள் ஓர் அனைத்துண்ணி வகையைச் சார்ந்ததாகும். இவை விதைகள், பூச்சிகள், பழங்கள், ஊர்வன மற்றும் சிறிய பாலூட்டிகளை உண்ணும். மயில்கள் விளைநிலங்களில் வசிக்கும்.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source: 

No comments:

Post a Comment