Wednesday 4 March 2015

பால் உற்பத்தியைப் பெருக்கும் பசுந்தீவனச் சோளம் !

நல்ல சத்துள்ள, தரமான பசுந்தீவனங்கள் போதிய அளவிலும், சரி விகிதத்திலும் கிடைக்காததே கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன் குறைவதற்கு முக்கியக் காரணமாகும்.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பசுந்தீவனச் சோளம் (கோ.எப்.எஸ். - 31) பயிரிட்டு கால்நடைகளுக்கு வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்கிறது.
இதன் உற்பத்தி முறை குறித்து காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன் கூறியது:

பசுந்தீவனச் சோளம் கோ.எப்.எஸ். - 31 ரகத்தின் சிறப்பியல்புகள்: அதிக கிளைக்கும் திறன் கொண்டது. அகலமான இலைகள், கதிர்களில் இருந்து மணிகள் கொட்டாமல் இருக்கும் தன்மை கொண்டது.
அதிக புரதச்சத்து (9.86 சதவீதம்) கொண்டதும், அதிக பசுந்தீவன உற்பத்தி கொண்டதுமாகும்.
அதாவது 1 ஹெக்டேருக்கு 1 ஆண்டில் 190 டன் என்ற அளவில் அறுவடை செய்யலாம். மறுதாம்பு பயிருக்கு ஏற்றது. சுவையான பசுந்தீவனமாகும். கால்நடைகள் இவற்றை விரும்பி உண்கின்றன.

சாகுபடி தொழில்நுட்பம்: இந்த பசுந்தீவனப் பயிரை ஆண்டு முழுவதும் எல்லா மண் வகைகளிலும் பயிரிடலாம்.
நிலத்தை இரும்புக் கலப்பைக் கொண்டு 2 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பிறகு 1 ஏக்கருக்கு 10 டன் என்ற அளவில் மக்கிய தொழு உரம், 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 10 பாக்கெட் பால்போ பாக்டீரியா கலந்து இட வேண்டும்.
பின்னர், 2 முதல் 3 முறை உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் 6 மீட்டர் நீளமும், 60 செ.மீ. இடைவெளியும் கொண்ட பாத்திகள் அமைக்க வேண்டும்.
மண் பரிசோதனையின் அடிப்படையில் உரங்கள் இட வேண்டும்.
மண் பரிசோதனை செய்யாவிடில் ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 12 கிலோ தழைச்சத்து, 16 கிலோ மணிச்சத்து, 8 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்.
மேலுரமாக விதைத்த 25 நாள்கள் கழித்து 12 கிலோ தழைச்சத்து போட வேண்டும்.
மறுதாம்புப் பயிரில் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் 18 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.
4-ஆவது அறுவடையின் போது ஏக்கருக்கு 18 கிலோ தழைச்சத்துடன் 16 கிலோ மணிச்சத்து, 16 கிலோ சாம்பல் சத்தையும் இடுவது நல்லது.
ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியில் விதைகளை பாத்திகளின் இருபுறமும் விதைக்க வேண்டும்.
விதைக்கு விதை இடைவெளி 10 முதல் 15 செ.மீ. இருக்க வேண்டும். விதைத்த 20 நாள்கள் கழித்து களை எடுக்க வேண்டும்.
தேவைப்பட்டால், 35 முதல் 40-ஆவது நாளில் அடுத்த களை எடுக்கலாம்.

நீர் மேலாண்மை: நீர் மேலாண்மையைப் பொருத்தவரை விதைத்தவுடன் ஒரு நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.
3-ஆவது நாளில் உயர் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். பிறகு 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு: பொதுவாக பயிர் பாதுகாப்பு தேவையில்லை. விதை உற்பத்திக்காக பயிர் செய்தால், குருத்து ஈ காணப்பட்டால் விதைத்த 10-ஆவது நாளில் புரபனோபாஸ் 300 மில்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பசுந்தீவன அறுவடைக்கு 30 நாள்களுக்கு முன் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும்.

அறுவடை: விதைத்த 65 முதல் 70 நாள்களில் அறுவடை செய்து விடலாம். பிறகு ஒவ்வொரு மறுதாம்பு பயிரும் 50 நாள்கள் இடைவெளிகளில் அறுவடை செய்யலாம்.
கோ.எப்.எஸ். - 31 ரகம் 1 ஏக்கரில் 68 டன்கள் பசுந்தீவனம் முதல் 7 அறுவடைகளில் கிடைக்கும்.

பூக்கும் பருவத்துக்கு முன் கால்நடைகளுக்கு வழங்க வேண்டாம்: பசுந்தீவனச் சோளம் கோ.எப்.எஸ். - 31 ரக பயிர் விளைந்த 40 நாள்களுக்குள்பட்ட இளம் பயிர் பருவத்தில் கால்நடைகளுக்கு வழங்கக் கூடாது.
அந்த பருவத்தில் ஹைட்ரஜன் சயனைடு என்ற நச்சுப் பொருள் அதிகம் இருப்பதால் அது கால்நடைகளுக்கு ஏற்றதல்ல.
எனவே பயிர்கள் பூத்தப் பின் அறுவடை செய்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.

விதை உற்பத்தி: இந்த தீவன சோளத்தை விதை உற்பத்தி செய்தால் அதிக லாபம் ஈட்டலாம்.
விதை உற்பத்தி செய்வதாக இருந்தால் பயிர் இடைவெளியை மட்டும் அதிகரித்து 60-க்கு 15 செ.மீ. அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மற்ற தொழில்நுட்பங்களை சாகுபடி குறிப்பில் உள்ளதுபோல கடைப்பிடிக்கலாம். பயிர்கள் 110 முதல் 125 நாள்களில் விதை அறுவடை செய்யலாம்.
1 ஏக்கருக்கு 300 கிலோ வீதம் விதை மகசூல் தரும். ஆண்டுக்கு 3 முறை விதை அறுவடை செய்யலாம். அறுவடை செய்த விதைகளை 60 நாள்களுக்குப் பிறகு விதைப்புக்கு உபயோகிப்பது நல்லது.
மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தை 044 - 2745 2371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் உதவிப் பேராசிரியர் பெ. முருகன்.

Source: பால்-உற்பத்தியைப்-பெருக்கு/article2698147.ece

No comments:

Post a Comment